Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஓவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சைனுதீன். ஊருக்கு ஒன்று என்றால் ஒடிச்சென்று உதவுபவரான இவர், இப்பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். வாழ்க்கையில் வறுமை வாட்டிய போதிலும், தனது சமூக சேவையில் விடாது ஈடுபட்டிருந்தவர் சைனுதீன்.
கடந்த 8-ம் தேதி இப்பகுதியில் நிலச்சரிவால் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டு அதில் சைனுதீன் சிக்கினார். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்ததால், அவரை மீட்க முடியாமல் போனதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஓவேலி கிராம மக்கள்.
இதைதொடர்ந்து, அவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு, காவல், வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் கிராம மக்கள் என 150 பேர் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்
சமூக சேவகரான சைனுதீனின் மூன்று ஆண் பிள்ளைகள் பள்ளி, கல்லூரியில் பயின்று வரும் நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய சைனுதீனின் தாயார் கதியம்மா, பிள்ளைகளின் கல்விக்கு அரசு முடிந்த உதவியை செய்துதர வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்தார்.